1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன.
காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
...