
வேதா’ படத்தை தயரித்த வாசுதேவ் பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்து அறிமுகமாக, வெண்பா கதாநாயகியாக நடிக்கிறர். இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த நேரத்திலேயே இப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியிருக்கிறது சன் டி.வி. நிறுவனம்!
இந்த தகவலை சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இப்பட இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்! வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கே சன் டிவி நிறுவனம் முன்னுரிமை கொடுக்கும். அப்படியிருக்கும்போது புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை சன் டி.வி.வாங்கியிருப்பது இப்படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வி.கே.டி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.வேலு தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் பேசும்போது, “கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட காமெடி கலந்த, காதல் கதைதான் இந்த ‘பள்ளிப் பருவத்திலே’ திரைப்படம்.
படத்தின் படப்பிடிப்பு ஐம்பது நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த ஐம்பது நாள் படப்பிடிப்பில் எங்கள் யாருக்கும் எந்தவித சோர்வும் இருந்ததில்லை. காரணம் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல அந்த கிராம மக்களுடன் பழகினோம்.

படத்திற்காக காமெடியாக மட்டும் இல்லாமல் கே.எஸ்.ரவிகுமார் ஊர்வசி, தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு உட்பட எல்லா நடிகர்களும் படப்பிடிப்பு தளத்தை சுற்றி எங்களையும் ஊர் மக்களையும் சிரிக்கவைத்து சந்தோஷப்படுத்தினார்கள்.

சினிமா மேல் எனக்கு இருந்த காதலால் நான் உதவி இயக்குனராக வேலை செய்ய கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா இருவரிடமும் சேர வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது.
ஆனால் நான் தயாரித்த ‘வேதா’ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் மூலம் கே.எஸ்.ரவிக்குமார் ஸாரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ, அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் என்றார் பாஸ்கர்.

