1980-90கள் வரை பெரும்பாலும் நாடகங்கள் திரைப்படங்களை போல் வெளிவந்து அதுவும் சனி மற்றும் ஞாயிறுகளில் சபாக்களில் கூட்டம் நிரம்பி வழிந்து வந்தது. ஆர்.எஸ்.மனோகர், சோ, எஸ்.வி.சேகர், விசு, காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் இன்னும் பிற நாடக கலைஞர்களால் நாடகங்கள் மேடை ஏறிவந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், காலம் செல்ல செல்ல ரசிகர்களும் குறைந்து கலைஞர்களும் வயது மூப்பின் காரணமாக நடிப்பது குறைய தொடங்கியது.அப்படியும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனியார் தொலைக்காட்சிகளின் வருகை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக நாடக தொழில் நலிவடைந்து விட்டது. தொலைக்காட்சிகளிலும் மெகா, மகா என சீரியல்கள் படையெடுத்து இன்றைய பெண்கள், முதியோர் என அனைவரும் டிவி முன்பு அமர்ந்து சீரியலே கதி என்றாகிவிட்டது.
இதிகாச புராணங்கள் முன்பெல்லாம் மேடையேறி அதற்கென்று கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வசனங்களை பிழையில்லாமல் கடைசி வரிசையில் இருப்பவர்கள்கூட கேட்கும் அளவிற்கு கணீர் குரலில் நாடகங்கள் மேடையேறியது பொற்காலம். ஆனால் இன்று நாடகம் என்பது ஏதோ அதிசயம் என்பதுபோல் ஆகிவிட்டது.
இந்நிலையில் திரு.ஒய் .ஜி.மகேந்திரன் அவர்கள் தனது கம்பெனியில் முன்பு அரங்கேற்றிய காசேதான் கடவுளடா என்ற நாடகத்தை அவ்வப்போது ரசிகர்களின் வேண்டுகோளோளுக்கு ஏற்ப அவ்வப்போது மேடையேற்றிவந்தார். இந்நிலையில் நேற்று காசேதான் கடவுளடா நாடகம் மேடையேற அதை காண்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்திருந்தார். நாடகம் முழுவதையும் ரசித்து பார்த்து முடிவில் ஒய் .ஜி.மகேந்திரன் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை கூறினார் ரஜினிகாந்த், பின்னர் குழிவினர் அனைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
