செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

 

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.

பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். ஒரு கட்சியின் ஆண் பிரமுகருக்கும் இன்னொரு கட்சியின் பெண் பிரமுகருக்கும் உள்ள உறவை சொல்லும் கதைக் கருவைக் கொண்ட படம் இது .அந்த ஆண் பிரமுகருக்கு ஒரு மனைவியும் பெண் பிரமுகருக்கு ஒரு கணவரும் உண்டு என்ற ரீதியில் கதை போகும் அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். காரணம் கதை அப்படி காமராஜர், கக்கன் போன்ற உன்னதமான தலைவர்களை கொண்டிருந்த நாடு இது ஆனால் இன்று ஒழுக்கம் குறைந்து விட்டது என்பதை சொல்லும் படம் இது .

மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். யாரும் இதில் துணிந்து நடிக்க மறுத்தார்கள். ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது. . இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஒரு பிரபல அரசியல் கட்சியின் பெண் எம்பிக்கும், இன்னொரு பிரபல கட்சியின் மூத்த ஆண் எம்பிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சமூக வலைதளங்களில் பல படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதை இருவரும் மறுத்தனர். விமான நிலையத்தில் ஆண் எம்பியை அந்த சர்ச்சையில் சிக்கிய பெண் எம்பி கன்னத்தில் அறைந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போல சம்பவங்களை சுட்டிக்காட்டி இந்த படம் வெளியாவதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ‘சிவா மனசுல புஷ்பா’ ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பெயருக்கு சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் ‘புஷ்பா புருசன்’ என்ற தலைப்பையும் பதிவு செய்து வைத்திருக்கிறாராம் இயக்குனர் தயாரிப்பாளர் வராராகி.
வெளியாகி உள்ள போஸ்டர் டிசைன் அரசியல் கட்சிகளிடையே அனலை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

522 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன