
தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.
அவருக்கு (வயது 62). சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி.
ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார்.
சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பிய போதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.
அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்சி படித்து வருகிறார். கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற ஹிட் பாடலில் ராதிகாவுடன் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
277 Views
