வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

வேலைக்காரன் விமர்சனம்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என தன்னுடன் வேலைபார்க்கும் வேலைகாரர்களை கொண்டு போராடும்படியாக படம் சிறப்பாகவே வந்திருக்கிறது.

தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயிசம் இன்றி சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. சிவகார்த்திகேயன் படம் என்றாலே அது காமெடி கலந்துதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சியிலும், ஆக்‌ஷன் காட்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறலாம்.

படத்தின் இரண்டாவது பாதியில் இருந்து வந்தாலும், பகத் பாஷில் வரும் காட்சிகளும், எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல், பேசாமல் இருக்கும் அவரது நடிப்பும், புயலுக்கு பின் அமைதி என்பதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நயன்தாரா வழக்கம் போல வந்து ரசிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனை காதல் செய்யும் காட்சிகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது.
குப்பத்து ரவுடியாக வந்தது பிரகாஷ் ராஜ் மிரட்டிச் செல்கிறார். இதுவரை ஏற்காத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் சினேகாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவரது ஸ்டைலில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் வசந்த்தின் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. படத்தின் சீரியசுக்கு நடுவே ரோபோ சங்கர் அவ்வப்போது வந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
மற்றபடி தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கின்றனர். சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவாக சார்லி, ரோகிணி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பின்னணி இசையில் அனிருத் பட்டைய கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக கருத்தவலெ்லாம் கலீஜாம் பாட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
432 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன