புதன்கிழமை, மே 20
Shadow

பிரசவத்தில் உள்ள மெடிக்கல் மாஃபியாவை தொட்டு சர்ச்சையை ஏற்படுத்துமா “பர்த் மார்க்”

 

‘நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark) ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு, சேபியன்ஸ் (SAPIENS) எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்கள். விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதில், நாயகனாக ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில், “இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம், அதற்காக பல கதைகளை எழுதினோம்.

அப்போது தான் நேஞ்சுரல் பர்த் பற்றி விக்ரம் ஒரு விசயத்தை கூறினார். அது பற்றி நாங்கள் நிறைய படித்தோம். அப்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் எங்களுக்கு தெரிய வந்தது. இந்தியாவின் சில மாநிலங்களில் நேஞ்சுரல் பர்த் முறை இருந்தாலும், அதை கமர்ஷியலாக அதிகம் பேர் செய்வதில்லை, சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால், எங்களுடைய முதல் படமாக இதை தேர்வு செய்தோம்.

நேஞ்சுரல் பர்த் என்பதால், அறுவை சிகிச்சை முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை.

அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களையும், தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், இதை எல்லாம் தாண்டி மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது?, படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் போன்றவை தான் படத்தின் முக்கிய அம்சங்கள், அவற்றை தான் நாங்கள் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம்.

த்ரில்லர் ஜானர் என்று சொல்வதை விட, படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை த்ரில்லர் மனநிலையில் இருப்பார்கள், அந்த அளவுக்கு படத்தில் எதாவது ஒன்று நடந்துக்கொண்டு தான் இருக்கும். அது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறோம், படம் பார்க்கும் போது நிச்சயம் நீங்களும் அதை உணர்வீர்கள்.

ஷபீர் மற்றும் மிர்னா இருவரை சுற்றி தான் கதை நகரும். இவர்களை தாண்டி நான்கு கதாபாத்திரங்கள் வருவார்கள். ஆனால், ஷபீர் மற்றும் மிர்னா இவர்களுடைய கதாபாத்திரம் மற்றும் அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பு, ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும். மிர்னாவை ஆடிசன் மூலமாகத்தான் தேர்வு செய்தோம்.

கதாநாயகிக்காக பல நடிகைகளை ஆடிசன்  செய்தோம், ஆனால் ஜெனி வேடத்திற்கு பொருத்தமாக இல்லை. மிர்னா வந்தார், அவரை லுக் டெஸ்ட் செய்தோம். படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை விவரித்து நடிக்க வைத்தோம், அதில் அவர் நடித்த போது, இவரை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அதனால் தான் அவரை தேர்வு செய்தோம்.

அதேபோல் தான் ஷபீரும். எங்கள் கதாபாத்திரத்திற்கான சரியான நபராக இருப்பார் என்று அவரை அணுகினோம். அவரும் படத்தின் ஐடியா மற்றும் முழுக்கதையையும் கேட்டுவிட்டு ஓகே சொன்னது மட்டும் அல்ல, எங்கள் படத்திற்காக மற்ற படங்களை விட்டுவிட்டு எங்களுடன் பயணித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை விவரித்த உடன் அந்த காட்சியில் நடிக்கும் முறையை ஷபீர் மற்றும் மிர்னா செய்யவில்லை. அவர்கள் எப்போது இந்த கதையை கேட்டார்களோ அதில் இருந்து கதாபாத்திரத்திற்காக தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டார்கள்.

மூணார் அருகே உள்ள மரையூர் என்ற கிராமத்தில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். கதைக்கான லொக்கேஷனை சுமார் 7 மாதங்களாக தேடிய பிறகு தான் இந்த இடம் கிடைத்தது. லொக்கேஷன் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் மரையூர் கிராமம் இருந்தது. அங்கு எங்களுக்கு ஏற்ற வகையில்  நான்கு விதமான செட் அமைத்து அதில் தான் படப்பிடிப்பு நடத்தினோம்.” என்றார்.

 

202 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன