நடிப்பு: ஜிவி பிரகாஷ், பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜெ பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஊர்வசி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: ஜிவி பிரகாஷ்
தயாரிப்பு: டி சிவா (அம்மா கிரியேஷன்ஸ்)
இயக்கம்: ராஜேஷ் எம்
சென்னை டு பாண்டிச்சேரி… அல்லது பாண்டி டு சென்னை… இந்த ஒரு ட்ரிப்பில் ஒரு முழுப்படத்தையே எடுத்துவிடுவார் இயக்குநர் ராஜேஷ் எம். அப்படி எடுக்கப்பட்டுள்ள படம்தான் இந்த கடவுள் இருக்கான் குமாரு. காமெடிப் படத்துக்கு சீரியஸான கதை தேவையில்லை என்று முடிவு செய்து, ஒரு லைன் பிடித்திருக்கிறார். அது…

ஜிவி பிரகாஷுக்கும் ஆனந்திக்கும் காதல். ஆனால் இந்து – கிறிஸ்தவ பிரச்சினையைக் காட்டி ஆனந்தியின் அப்பா எம்எஸ் பாஸ்கர் மறுக்க, அது ‘பேசுவதெல்லாம் உண்மை’ ஊர்வசியால் நிரந்தரமாக பிரேக் ஆகிறது. கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது பாண்டிச்சேரிக்கு ஒரு பேச்சுலர் பார்ட்டிக்குப் போகிறார்கள் ஜிவி பிரகாஷும் அவர் நண்பன் ஆர்ஜெ பாலாஜியும். போன இடத்தில் ஏகத்துக்கும் சரக்கு வாங்கி காரில் ஸ்டாக் வைக்கிறார் பாலாஜி. வழியில் ‘பேட்’ போலீஸ் பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், சிங்கம் புலியிடம் மாட்டுகிறார்கள். லஞ்சமாக ரூ 3 லட்சம் கேட்கிறார் பிரகாஷ் ராஜ். அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுமாறு மணப்பெண் நிக்கி கல்ராணியிடம் கேட்கிறார் ஜிவி. ஆனால் அவரோ நீ எக்கேடு கெட்டும் போ, என் கார் பத்திரமாக வேண்டும் சுயநலமாகப் பேசுகிறார். முன்னாள் காதலியான ஆனந்தியிடம் இதே உதவியைக் கேட்க, அவர் மறுபேச்சின்றி உதவுகிறார். கடைசியில் ஜிவி – நிக்கி கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதை யூகிப்பதில் பெரிய சிரமமில்லையே!
ஜிவி பிரகாஷுக்கு வழக்கமான லவ்வர் பாய் வேடம். நடிப்பில் இன்னும் மெனக்கெட வேண்டும். ஆனால் சுற்றிலும் இருக்கும் கேரக்டர்களால் இவரது நடிப்பில் தெரியும் பக்குவமின்மை தெரியாமல் போகிறது. படத்தின் பெரிய பலம் பிரகாஷ் ராஜ், ஆர்ஜெ பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம் புலி, எம்எஸ் பாஸ்கர் போன்றோர்தான். இவர்களின் சிரிப்பு வெடிகள் படம் முழுக்க கலகலப்புக்கு கியாரண்டி. ஆனால் இன்னும் கூட இயல்பான காமெடிக் காட்சிகளை ராஜேஷ் யோசித்திருக்கலாம். அந்த பேசுவதெல்லாம் உண்மை, டிவி நேரடி ரிப்போர் இரண்டுமே சரியான ‘ஸ்பூஃப்’ ரகம் என்றாலும், கொஞ்சம் நீளம். வெட்டியிருக்கலாம். ஆங்… ரெண்டு ஹீரோயின்கள் இருக்காங்கல்ல… நிக்கி கல்ராணி, ரொம்ப நேரம் அவர் குரலை மட்டுமே போனில் கேட்கிறோம். பாடல்களில் வந்துபோகிறார். காஸ்ட்யூம்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனந்திக்குதான் மெயின் ரோல் போல. ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்.
