தர்பார் சர்ச்சை போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் சில திரையரங்குகளில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான அளவில் வசூல் ஈட்டவில்லை என்றும் சில விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க சில விநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். இந்நிலையில், தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.