
நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
குடியுரிமை திருத்தச்சட்டத்தால், இந்திய குடிமக்களை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கும்.
இதன் மூலம் இந்துக்கள் உள்பட அனைத்து மத குடிமக்களும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். அசாமில், 19 லட்சம் பேரால் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. இவர்களில் 14 லட்சம் பேர் இந்துக்கள்.
தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் அதனை ஆதரிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்
