மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!
மதுரை என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியும், கோவலனும், சிலப்பதிகாரமும் இந்த வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தும் விதமாக மதுரை போலீஸ் எஸ்.பி.அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-
வணிகம் செய்ய மதுரை வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். இங்கிருந்து தான் அதாவது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.
மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு செய்த இலக்கியம் சிலப்பதிகாரம் தான். சிலப்பதிகாரத்தையும், மதுரையையும் சிறப்பிக்கும் வகையில் கடம்பு, வாகை, வாழை, மா, பலா, வேங்கை, கொன்றை, மருது, மூங்கில், இலவ மரம் என பல வகையான மரங்கள் அன்றைய மதுரையில் இருந்ததாக சிலப்பதிகாரம் சொன்னது. அந்த வகை மரங்களை எல்லாம் தேடி பிடித்து நட்டு வைத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சுமார் 2 ஏக்கரில் சிலப்பதிகார பூங்காவை உருவாக்கி இருக்கிறோம்.
மேலும், பூங்கா நுழைவு வாயிலில் சிலப்பதிகார கதை சுருக்கத்தையும், பூங்காவுக்குள் ஆங்காங்கே மங்கள வாழ்த்துப் பாடல்களின் கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பூங்காவின் நடுவில் பிரமாண்ட கால் சிலம்பு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூன் 1-ந் தேதி எளிமையாக நடக்கிறது.