அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக வியாபாரி-மகன் பரிதாபமாக அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும் – குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து காவலர் ரேவதியுடன் நீதிபதிகள் செல்போனில் பேசினர். நீதிபதிகள் உத்தரவை அடுத்து அரிவான்மொழியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு வாயிலில் இரு காவலர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.