
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!
அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அதை இடித்து தரை மட்டமாக்கினர். இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடத்தி முடித்து விட்டது.
அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.

அதை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் (செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது
