
2021 பொங்கல் விருந்து: மாஸ்டர் விஜய்யுடன் மோதும் சுல்தான் கார்த்தி , ‘ஈஸ்வரன்’ சிம்பு!
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர். அரசு தரப்பில் இருந்து விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாகின்றன.
அதேநேரம், அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் வர சில நாட்களோ அல்லது மாதங்களோ ஆகலாம். எனவே விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் ஆகிய திரைப்படங்களை பொங்கலுக்கு ரீலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதை உறுதி செய்துள்ளது படக்குழு.
கார்த்தியின் சுல்தான், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டால் மாஸ்டர் உடன் நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.
எது எப்படியோ, சினிமா ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு பொங்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.

