
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கலந்தாய்வின் மூலம் அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.
இருப்பினும், ஒரு சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது.
இதனிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் எனக் கூறிய அவர், மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், கல்விக் கட்டண உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 18ம் தேதி உத்தவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேரத்தில் திமுகவின் இதுபோன்ற அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
