
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை நீங்க வேண்டும் என தலைநகர் புதுடெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக நாட்டில் தினசரி ரூ. 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. தொழில்துறை அமைப்பான அசோசெம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 20 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், தொழில்துறை பாதிப்பினை சந்தித்துள்ளது. தினசரி 3 ஆயிரத்து 500 கோடி வீதம் இதுவரை 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிமுகம் செய்த, விவசாயச் சட்டங்கள் மூலம் தங்களின் விவசாய உரிமைகள் பறிக்கப்படும் என விவசாயிகள் குரலெழுப்பி வருகின்றனர். இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகள், கால்நடையாகவும், டிராக்டர்கள் மூலமும் சென்று டெல்லி செல்லும் அனைத்து சாலைகளையும் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்வது உடனடி தேவையாக உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் தொழில்துறை வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
