
பப்ஜி மொபைல் இந்தியா என்னும் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க அனுமதியில்லை என மத்திய அரசு மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் ஒரு பெருங்கூட்டமே இந்தியாவில் அடிமையாக இருந்தது. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் முழுநேர பொழுதுபோக்காக பப்ஜி விளையாட்டு இருந்தது. சில மாணவர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு பப்ஜி விளையாட்டு மீதான மோகம் நாடு முழுவதும் இருந்தது. இதனால், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே குரல் எழுப்பினர்.
அதேநேரத்தில், இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் செல்போன் பயன்படுத்தும் தனி நபர்களின் தகவல்களை திருடுவதாகவும் புகார் எழுந்தது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் மக்களின் கோரிக்கையை மத்திய அரசும் உடனடியாக பரிசீலனை செய்தது. அதனடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பப்ஜி இந்தியா என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்திய அரசின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் அரசின் வழிமுறைகளை பின்பற்றி பப்ஜி இந்தியா கேம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து அறிய ஜெம் ஸ்போர்ட்ஸ் ( GEM Esports) மற்றும் மீடியா நாமா(MediaNama) தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனு அளிக்கப்பட்டது.
இந்த இரு மனுக்களுக்கும் பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், பப்ஜி விளையாட்டுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என கூறியுள்ளது. பப்ஜி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடருவதாகவும், அதில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டில் அவதார் நிர்வாணமாக இருப்பது, ரத்தம் தெறிப்பது ஆகியவை மாணவர்களின் மன நலனை பாதிக்கும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
தற்போது, புதிதாக அறிமுகப்படுத்த இருந்த பப்ஜியில் ரத்தத்துக்கு பச்சை கலரும், அவதாருக்கு உடையும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பப்ஜி விளையாட்டு சீனாவைச் சேர்ந்த Tencent நிறுவனத்துக்கு சொந்தமானது இல்லை, அந்த நிறுவனம் வெளியிடும் உரிமையை மட்டுமே பெற்றிருப்பதாக மத்திய அரசிடம் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பப்ஜி விளையாட்டு Krafton என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், IP address கூட அந்த நிறுவனத்தின் பெயரில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்களின் தகவல்கள் திருடப்படவில்லை என விளக்கமளித்துள்ள Krafton நிறுவனம், இந்தியாவில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure Cloud – உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இந்தியர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. தற்போது, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு பப்ஜி இந்தியா என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கி, பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி கேட்டுள்ளது. அதில், அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி கேம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி வழங்குவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், அரசின் முடிவை மீறி பப்ஜி விளையாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடியாது என்பதால், சட்டரீதியாகவே உரிய நடவடிக்கைகள் எடுக்கும் நிலைக்கு பப்ஜி இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
