வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

இந்திய பிரஜை நான் இந்த நாட்டில் எல்லா இடங்களிலும் சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு… பிரிவினைவாதத்தை நிறுத்தி விட்டு நம் முன் உள்ள பிரச்சனைகளை தீர்க்க போராடுவோம் – அமலா பால் ஆவேச அறிக்கை

நடிகை  அமலா பால் பாண்டிச்சேரியில் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாண்டிச்சேரி கவர்னர் கிரன் பேடியும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் பாண்டிச்சேரி போக்குவரத்து அமைச்சர் ஷாஜகான் “அமலாபால் கார் வாங்கிய விஷயத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை” என்று கூறி கவர்னர் குற்றச்சாட்டை மறுத்தார்.

அடுத்ததாக போலி முகவரி கொடுத்து கார் வாங்கியதாக அமலா பால் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நான் இந்திய பிரஜை இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம், சொத்துக்கள் வாங்கலாம். வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள என் மீது குற்றம் சாட்டி மொழிவாரியாக பிரிவினை வாதத்தை தூண்டி விட வேண்டாம் என ஆக்ரோஷமாக அறிக்கை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் இருந்து….

மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு,

தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமை படுத்தபட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயபடுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ? கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்த போது, அங்கும் இந்திய ரூபாய தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும். இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.

குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட-திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும்.

உங்கள்,
அமலா பால்

233 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன