
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவைப் போலவே நாங்களும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.
ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் அதிமுகவும், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லாத வெறியை தீர்த்துக் கொள்ள திமுகவும் முயன்று வருகின்றன.
ஜெயலலிதா இல்லாத நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது. அதேபோல, கருணாநிதி இல்லாத திமுகவை, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் துணையுடன் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.
அதன்படி, திமுக குறைந்தபட்சம் 180 முதல் 190 தொகுதிகளில் போட்டியிட வேண்டும், கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட கண்டிப்புகளை முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் முன்பு தூக்கி போட்டுள்ளார். ஆனால், திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் இந்த முடிவை நேரடியாக எதிர்த்து வருகின்றனர். ஸ்டாலினும் மலுப்பலாக ஏதேதோ சமாளித்து, தனது திட்டத்திற்கு கூட்டணி கட்சிகளை சம்மதம் தெரிவிக்க வைத்து விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, நேற்று முன்தினம் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவின் தனித்தன்மையை காக்க தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும், எங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வைகோவின் அறிவிப்பு திமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது
இந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவைப் போலவே நாங்களும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருப்பது திமுகவின் தேர்தல் திட்டத்திற்கு சிக்கலாகுமா.
