சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது – மு.க.ஸ்டாலின்

 

நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் 
நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு 
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

“அமைச்சர் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். அமைச்சர் தங்கமணி எதையும் வெளியில் தெரியாமல் செய்துவிடுவார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (19-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரையில் இப்போது மக்கள் கிராம சபை கூட்டத்தை நாம் நடத்தப் போகிறோம். கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று எடப்பாடி அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு போட்டவுடன், ‘கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரை நாம் மாற்றி, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்று அறிவித்து அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு, ஆர்வத்தோடு, எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள். அவ்வாறு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு வருக… வருக… வருக… என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

 

இந்த பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை மிக சிறப்பான வகையில், ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக அளவில் இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள்.

உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் தான் எப்போதும் பாதுகாப்பு, அதேபோல எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறந்து விட மாட்டோம்.

சிறப்பான மாநாடு போல இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை, நம்முடைய மாவட்டக் கழக செயலாளர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர், செயல்வீரர், அருமை நண்பர், கே.எஸ்.மூர்த்தி அவர்கள் இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அவர் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் களத்தில் இறங்கி விட்டால் கில்லி போல எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றவர். அவரைத் தான் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக பரமத்தி வேலூர் தொகுதியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மாவட்டக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் பணியாற்றி கொண்டிருக்கும் நம்முடைய மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முழு காரணமாக இருந்து இதை நடத்திக்கொண்டிருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் அவருக்கு துணை நின்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கும அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய சார்பிலும், தலைமை கழகத்தின் சார்பிலும் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சியை நாம் தொடங்கப் போகிறோம். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தபோது, இதேபோல் ஊராட்சி சபை கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். இதேபோல் நான் பல ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்றேன். 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு நான் சென்றேன்.

நீட் பிரச்சினையினால், அரியலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி முதன் முதலில் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து பலர் இதுவரை இந்த நீட் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டு இறந்து இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும். இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக முடியும் என்ற சூழல் வந்து விட்டது. அதை அடைய முடியாத மாணவ மாணவியர்கள் வேதனைக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு இறக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த ஆட்சியில் நீட் தேர்வைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்படவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இந்த நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வரவிடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கி வைத்திருந்தார்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில் கூட அதைக் கொண்டுவர முடியவில்லை. தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அது பாராட்டக் கூடிய ஒன்று தான். நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் துணிச்சலாக அதை உள்ளே கொண்டு வர மாட்டேன் என்று தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்.

ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு அது உள்ளே வந்துவிட்டது. சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 2 தீர்மானங்கள் போட்டோம். தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. பலமுறை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் நான் இப்பொழுது சொல்கிறேன். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையோடு தி.மு.க ஆட்சிக்கு வரப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு, நிச்சயம் நீட் ஒழிப்பிற்காக போராடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படி பல பிரச்சினைகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறீர்கள். உதாரணமாக இங்கு தொகுதியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி என்பவர் ஒரு மூத்த அரசியல்வாதி. சட்டமன்றத்தில் நல்லபடியாக பேசுவார்.

ஆனால், வேலுமணி, தங்கமணி இவர்கள் இருவரைப் போல இந்த ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். இவர் எதையும் வெளியில் தெரியாமல் செய்வார். “வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல” பேசுவார்.

காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்தது, மின்வாரியத்திற்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் என்று இப்படி பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம், ஆதாரங்களோடு, ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.

கொடுக்கப்பட்டு கிட்டதட்ட 2 மாதம் ஆகிறது. இது தவறு என்றால் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட்டு இருக்கலாம். ஸ்டாலின் சொல்வது, தி.மு.க சொல்வது அனைத்தும் தவறு. எனவே நாங்கள் வழக்கு போடுகிறோம் என்று சொல்லி வழக்குப் போட்டிருக்கலாம். இதுவரைக்கும் அவர்கள் வழக்குப் போடவில்லை.

ஏன் வழக்கு போடவில்லை? ஆகவே தவறு நடந்திருக்கிறது. இது எல்லாம் உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தரமற்ற நிலக்கரி வாங்கியதில், போலி மின்சார கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று நான் சொல்லி இருக்கிறேன்.

தங்கமணி அவர்கள் தமிழகம் ‘மின் மிகை’ மாநிலமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது பொய் மட்டுமல்ல; ஆகாய அளவிற்கான பொய். தன்னுடைய தவறு எல்லாம் வெளியே வரக்கூடாது என்பதற்காகத் தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட, தி.மு.க தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நம்பிக்கை உங்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.

அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து மறைந்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் மறைந்தது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது.

ஒரு முதலமைச்சர் மறைந்தார் என்றால் அவருக்கு எந்த வகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது? என்ன மருந்துகள் தந்தார்கள்? எப்படி இறந்தார்? ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை? என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் மரபு.

சாதாரணமாக ஒருவர் இருந்தால் கூட அவர் எப்படி இறந்தார் என்ற உண்மை நமக்கு தெரிய வருகிறது. ஆனால், அவர் நாட்டினுடைய முதலமைச்சர். நமக்கும் அவருக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

1.1% வித்தியாசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். 1.1% குறைவாக இருந்ததால் நாம் எதிர்க்கட்சியாக வந்துவிட்டோம். இருப்பினும் நமக்கும் சேர்த்து தான் அவர் முதலமைச்சர்.

ஒரு முதலமைச்சர் மறைந்தார் என்றால், உண்மையாக நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தான் இறந்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதுதான் மறைந்தார்.

அண்ணா மறைந்தபோது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலையிலும் மாலையிலும் அவர் எப்படி இருக்கிறார் என்ற செய்தியை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது தான் மறைந்தார். அப்போது அவருக்கும் இதேபோல அவ்வப்போது நிலவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது யாராவது உண்மையை சொன்னார்களா? மந்திரிகள் சென்று பார்த்தார்களா? யாரும் பார்க்கவில்லை, யாரையும் பார்க்கவிடவில்லை.

ஆனால் வெளியில் வந்து மந்திரிகள், “அம்மா இட்லி சாப்பிட்டார்கள். அம்மா எழுந்து உட்கார்ந்தார்கள். அம்மா தொலைக்காட்சி பார்த்தார்கள்”என்று அவரை கேலி பொருளாக வைத்திருந்தார்கள். கேலி செய்யும் வகையில் நமக்கு எல்லாம் நகைப்பு வரும் நிலையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.

திடீரென்று அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. இதுதான் நமக்கு தெரிந்த செய்தி.

அவர் எப்படி மறைந்தார்? என்பதை விசாரிக்க விசாரணை வேண்டும் என்று கேட்டவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்டாலின் அல்ல. எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. மற்ற கட்சியை சார்ந்தவர்கள் அல்ல.

அ.தி.மு.க.வை சார்ந்த இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். அப்பொழுது அவர் ஆன்மாவோடு பேசினார். “எனக்கு துரோகம் நடந்துவிட்டது. என் பதவியை பறித்து விட்டார்கள். இருந்தாலும் நான் விட மாட்டேன். உங்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு விசாரணை நடத்த வேண்டும். நீதி விசாரணை வேண்டும்” என்று கேட்டது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.

அதற்கு பிறகு அவரை அழைத்து சமாதானம் செய்து, அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து, விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவருடைய தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கிட்டத்தட்ட 3 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் ஏதாவது ஒரு செய்தி வந்திருக்கிறதா? என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது? யாரிடத்தில் விசாரணை செய்தார்கள்? என்ற செய்தி இல்லை. இதுவரைக்கும் உண்மை வரவில்லை.

ஓ.பி.எஸ்.க்கு சாட்சி சொல்ல வேண்டும் 8 முறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஒரு முறை கூட அவர் வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?

அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்து விடுகிறார்கள். எங்கு கூட்டத்திற்குச் சென்றாலும் மேடையில் அம்மா படத்தை வைத்து விடுகிறார்கள். அம்மா பெயரில் தான் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மா எப்படி இறந்தார் என்பது இன்னும் வெளிவரவில்லை.

அவர்களுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் கவலை எல்லாம் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன். இது தான் கொள்கையாக அவர்களுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இதுதான் லட்சியமாக இருந்துகொண்டிருக்கிறது.

இன்னும் 4 மாதம் தான் இருக்கப் போகிறோம். இருக்கின்ற வரையில் அடித்துக் கொண்டு சென்றுவிடலாம். இருக்கும் வரை சுருட்டிக் கொண்டு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டு இன்றைக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று எடப்பாடி சொல்வார். அவர் படிப்படியாக வரவில்லை. ஊர்ந்து ஊர்ந்து வந்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சமூகவலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.

அப்படி வந்தவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல், இருக்கும் வரையில் கொள்ளையடித்து விட்டு சென்று விடலாம் என்பதற்காகத் தான் இன்றைக்கு மத்திய அரசு சொல்லக்கூடிய எந்த அநியாய சட்டமாக இருந்தாலும் அதை ஆதரித்து கொண்டு இருக்கிறார்.

விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் 3 வேளாண் சட்டங்கள் அதை எதிர்த்து 55 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் எல்லாம் கடும் குளிரில், கொட்டும் மழையில், கூடாரம் அமைத்துக்கொண்டு, குடும்பத்தோடு உட்கார்ந்து, அங்கேயே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கொடுமை அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

அதை தட்டிக்கேட்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இல்லை.

எல்லா மாநில அரசுகளும் அதை எதிர்க்கிறது. ஆனால் எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த மாநில அரசு அதை ஆதரிக்கிறது. இன்று கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லிக்கு சென்று இருக்கிறார். மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்திருக்கிறார்.

விவசாய பிரச்சனைக்காகவா? நீட் பிரச்சினைக்காகவா? சசிகலா விடுதலையாகி வெளியே வரப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்றால் ஆபத்து வந்துவிடும். அந்த ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான்.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது.

அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். நிச்சயமாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எவ்வளவோ பிரச்சனைகளை பற்றி சொன்னீர்கள். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். இந்த ஸ்டாலின் இருக்கிறான். நான் பார்த்துக்கொள்கிறேன்.”

313 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன