தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!
தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன்படி ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவிலில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம்.
மேலும், கோவிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.520 கோடி ஆகும். இதனை இந்து சமய அறநிலையத்துறை தன்வசப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை தன்வசப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் கோவிலில் போதிய பணியாளர்கள், அர்ச்சகர்கள், காவலர்கள், மடப்பள்ளி பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு பணிடங்களை நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.