
தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக சின்னி ஜெயந்தின் மகன் ஜெய் நியமனம்
பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த். 1980 – 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக, துணை நடிகராக வலம்வந்தார். சினிமாவில் எந்தப் பாத்திரம் ஏற்றாலும், அதில் தனித்தன்மையுடன், தனக்கே உரித்தான காமெடி பாணியில் ஜொலிப்பார் சின்னி ஜெயந்த். காலங்கள் மாற சினிமா வாய்ப்புகள் குறைய இதன்பின் காமெடி ஷோக்களில் நடுவராக களமிறங்கினார்.
2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இந்திய அளவில் 75வது இடம்பிடித்து தேர்ச்சி பெற்றார். அப்போதே இந்தத் தகவல் மிகவும் வைரலானது. இதையடுத்து, சின்னி ஜெயந்த் தனது மகன் ஜெயய்யை அழைத்துக் கொண்டு ரஜினி உள்ளிட்ட சினிமாவின் மூத்த பிரபலங்களை சந்தித்து ஆசி வாங்கினார்.

இதற்கிடையே, ஜெய் நாராயணன் ஐஏஎஸ் பயிற்சியில் கலந்துகொண்டார். தற்போது பயிற்சி முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு கேடரில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக ஜெய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்தே ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
வழக்கமாக திரைத்துறையை சேர்ந்தவர்களின் வாரிசுகள், திரைத்துறையை தேர்ந்தெடுப்பர். ஆனால் ஜெய் இந்த வழக்கத்தை மாற்றி சிவில் சர்வீஸ் தேர்வு மீது கவனம் செலுத்தி அரசு அதிகாரியாக மாறியிருக்கிறார்
