விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.
டோனிக்கு பிறகு அவர் 3 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது. விமர்சனங்கள் காரணமாக 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பே தெரிவித்தார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.
ஆனால் கோலியோ கேப்டன் பதவியைவிட்டு செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் கெடுவை நிராகரித்தார்.
இதைத்தொடர்ந்து 49-வது மணி நேரத்தில் ரோகித்சர்மாவை கேப்டனாக நியமித்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்தது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தது

