
வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை… தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்!
சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் மஹிபால். நகை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 17ஆம் தேதி வேப்பேரியில் உள்ள தன் வீட்டிலிருந்து 365 கிராம் நகையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக சென்றுள்ளார்.
அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,
தொலைந்து போன நகைகளை மீட்பதற்கு மஹிபால் சாதுரியமான முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.
தொலைந்து போன நகைகளை எடுப்பவர்கள், நகைக்கடை அல்லது நகை அடகு கடையில் தான் விற்க முற்படுவார்கள் என்ற அடிப்படையில்,
சென்னையில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வியாபாரிகள் சங்கத்தை அணுகி
அதன் வாட்ஸ்அப் குரூப் மூலம் தொலைந்து போன நகைகள் குறித்த தகவல்களை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
யாரேனும் இந்த வடிவமைப்பிலான நகைகளை விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில்தான் நேற்று புரசைவாக்கம் சண்முக ராயர் தெருவில் உள்ள தனியார் நகை அடகு கடை ஒன்றில் ரமேஷ் என்பவர் நகைகளை விற்பனை செய்ய வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த நகை வாட்ஸ்அப் குரூப்பில் காணாமல் போனதாக போடப்பட்ட நகை என்பதை அறிந்த,
நகை அடகுக் கடைக்காரர் உடனடியாக மஹிபாலுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மஹிபால் பெரியமேடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள அந்த நகை அடகு கடைக்கு சென்று நகையை விற்க வந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தன் நண்பர் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கொடுத்த தங்க நகை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெங்கடேஷ் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில்,
தன் மாமா ஜோதி என்பவர் மூலம் தன் தாய் கலா கொடுத்த நகைகள் என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஜோதி என்பவரை விசாரணை செய்த போது தான்,
கடந்த 17ஆம் தேதி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பழமுதிர்ச்சோலை அருகே சாலையில் கேட்பாரற்று தங்கநகைகள் கிடந்ததாகவும்,
அதில் சுமார் 365 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை தன் சகோதரி மற்றும் சகோதரியின் மகள் குடும்பத்திற்கு பிரித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் உள்ள 365 கிராம் நகை அனைத்தையும் மீட்டுள்ளனர்.
சாலையில் கிடந்த நகைகளை போலீசாரிடம் ஒப்படைக்காமல் அபகரிக்க முயன்ற நான்கு பேரையும் பெரியமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 50 சவரன் நகைகளை சாலையில் தவறவிட்ட உடன் பதட்டப்படாமல்,
சாதுர்யமாக அந்த நகைகளின் புகைப்படங்களை நகை அடகு கடை வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து தேட முயற்சி செய்ததன் மூலம், ஒரே வாரத்தில் காணாமல் போன நகையை மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
