
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த வாரத்தில் அவ்வப்போது சாரல் மழையும், ஒரு சில நாட்களில் சிறிது நேரம் கன மழையும் பெய்துவந்த நிலையில் நேற்று முன்தினம் 4 மணி நேரத்திற்குமேல் கனமழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் நேற்றும் 12 மணி முதல் சாரல் மழையும், ஒரு சில நேரங்களில் கனமழையும் பெய்தது.
மாலை 6 மணிக்கு மேல் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது. இது கோடை சீசனை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பிரதான சாலை மற்றும் பல்வேறு தெருப்பகுதி சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கோக்கர்ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.
சாரல் மற்றும் கனமழையிலும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக சுற்றுலாத்தலங்களை கண்டுரசித்தனர்.
உற்சாகமாக படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மேலும் பிரையண்ட், செட்டியார், ரோஜா பூங்காக்களில் மலர்களின் அழகை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
445 Views
