மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான், தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பிரபலமானார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹெய் சினாமிகா படங்களின் வெற்றி அவருக்கு திருப்பு முனையை கொடுத்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார்.
ஆனாலும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும்படியும் விமர்சித்தனர்.
எனது தந்தை மம்முட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்றும் பேசினர். அதை பொருட்படுத்தாமல் என்னை நம்பி கடுமையாக உழைத்து, இப்போது இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்” என்றார்.