செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

சென்னை ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தமிழக அரசு பால் கொள்முதலுக்கு மேலும் கூடுதல் விலை அறிவிக்க கோரி நடந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சண்முகம், பெருமாள், முனுசாமி முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது மாநில தலைவர் கே.முகமது அலி கூறியதாவது:- தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டிற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி அறிவிக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களை நடத்தினோம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 1 லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளோம்.

இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன