
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் சினிமா படப்படிப்பு தளமாக இருந்து வருகிறது. பொதுவாக சினிமா படப்பிடிப்பு சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியிலும், வெளிநாடுகளிலும் நடைபெறுவது வழக்கம். ஆனால் காரைக்குடி பகுதியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விடும் என்ற நம்பிக்கை சினிமாத்துறையினருக்கு இருந்து வருகிறது.
மேலும் இயக்குனர் ஹரி இயக்கும் தனது படத்தின் ஒரு காட்சியாவது காரைக்குடி பகுதியில் நடத்துவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இதன்படி சினிமா டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படம் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த படத்தின் 2-வது பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. சாமி-2 திரைப்படத்தில் நடிகர் விக்ரம், வில்லன் நடிகராக பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே. சுந்தர், பாலாசிங், தியாகு, வேலுமணி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

காரைக்குடி பெரியார்சிலை அருகில் முதல் பாகம் சாமி திரைப்படத்தில் பெருமாள்பிச்சை கதாபாத்திரத்தில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவின் வெண்கல சிலையை திறக்கும் காட்சியும், அதன் அருகில் அவருடைய நினைவு தின பொதுக்கூட்டம் நடத்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் பெருமாள் பிச்சை மகனாக வில்லன் நடிகர்கள் பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர், பாலாசிங் ஆகியோர் நடித்தனர்.
அதன்பின் சிலையை திறக்கும்போது அதை பொதுமக்கள் தடுப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து சாமி-2 படப்படிப்பு இன்றும் (செவ்வாய்க்கிழமை) காரைக்குடியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற படப்பிடிப்பை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
436 Views
