
ஊழல் தண்டனையால் ஜெயிலில்
தோட்டக்காரர் ஆன லாலு..!
தினமும் 93 ரூபாய் ஊதியம்
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக 6 வழக்குகளில் சிக்கினார்.
முதல் வழக்கில் 2013-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் லாலுபிரசாத் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியை இழந்தார். அதோடு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் பறி கொடுத்தார்.
சுமார் ஓராண்டு ஜெயிலில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்த நிலையில் கால்நடை தீவன ஊழலில் இரண்டாவது வழக்கிலும் லாலுவுக்கு ரூ.3.5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ராஞ்சி கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது சகோதரி கங்கோத்ரி தேவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று அந்த கவலையில் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்குகள் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளன. அதில் கலந்து கொள்ள பரோலில் செல்ல அனுமதி வழங்குமாறு லாலு பிரசாத் யாதவ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கால்நடை தீவன ஊழலில் மீண்டும் சிறை வாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் சிறையில் உள்ளார். 3½ ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து லாலுவுக்கு ஜெயிலில் தினசரி வேலை கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி லாலுவுக்கு சிறையில் தோட்டக்காரர் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. தோட்டங்களுக்கு அவர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களைகளை அகற்றி தோட்டத்தை அழகுப்படுத்த வேண்டும். இந்த வேலைக்காக லாலுபிரசாத் யாதவுக்கு தினமும் ரூ.93 வழங்க சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
