வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல்: ஸ்டாலின் – வைகோ -திருமா கைது

பஸ் கட்டண உயர்வு 100 சதவீதம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம், மறியலில ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

கடந்த சனிக்கிழமை தி.மு.க. தலைமையில் 7 கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. பஸ் கட்டணத்தை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மாநகரப் பேருந்துகளில் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக மாற்றப்பட்டுள்ளது.

அதுபோல புறநகர் பஸ்கள், நீண்டதூர எக்ஸ்பிரஸ் பஸ்கள், குளிர்சாதன பஸ்களின் கட்டணமும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக ரூ.73 வரை எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.120 கோடி இழப்பு ஏற்படும்.

என்றாலும் ஏழை- எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு முடிந்த அளவு கட்டணத்தை குறைத்து இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று முதல் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

அரசின் இந்த பஸ் கட்டண குறைப்பை தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தப் போவதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கானவர்கள் இதில் பங்கேற்றனர்.

சென்னை கொளத்தூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக அவர் காலை 9.45 மணிக்கு கொளத்தூரில் உள்ள தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் புடை சூழ நடந்து வந்தார்.

அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வந்தனர். மு.க.ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்பட அனைவரும் கைகளில் தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி ஜவகர்நகர் முதல் பிரதான சாலை வழியாக சென்றனர்.

அவர்கள் கொளத்தூரில் அகரம் பெரவள்ளூர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை அருகில் மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்சை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பஸ் கட்டணத்தை விலக்க கோரி அவர்கள் கோ‌ஷமிட்டனர். சில தொண்டர்கள் பஸ் கூரை மீது ஏறி அமர்ந்து கோ‌ஷமிட்டனர்.

ஸ்டாலின் தலைமையில் சுமார் 15 நிமிடம் அங்கு சாலை மறியல் நடந்தது. இதில் ம.தி.மு.க. சார்பில் ஜீவன், தி.மு.க. மாவட்ட செயலாளர் சேகர்பாபு, வக்கீல் கிரிராஜன், தேவஜவகர், சித்திக், நாகராஜ், ஐ.சி.எப். முரளி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் கண்டன வாசகம் கொண்ட அட்டை ஏந்தி இருந்தனர். மேலும் “அனுமதியோம் அனுமதியோம் பஸ் கட்டண உயர்வை அனுமதியோம்”, “திரும்ப பெறு, திரும்ப பெறு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறு”, “வஞ்சிக்காதே வஞ்சிக்காதே உழைக்கும் மக்களை வஞ்சிக்காதே”, “உயர்ந்தது இல்லை உயர்ந்தது இல்லை தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்ந்தது இல்லை” என்பன போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அந்த வழியாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து தடைப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள அமரீஸ் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சைதாப்பேட்டையிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் வைகோ தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பேரணியாக நடந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்த பேரணியில் தி.மு.க. சார்பில் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சார்பில் கராத்தே தியாகராஜன் மற்றும் சுப.வீரபாண்டியன் பங்கேற்றனர். பனகல் மாளிகை முன்பு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற கோரி கோ‌ஷமிட்டனர்.

சுமார் 10 நிமிட மறியலுக்கு பிறகு வைகோ, திருமாவளவன் உள்பட சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நந்தனத்தில் உள்ள ஒய்.எம். சி.ஏ. மைதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

469 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன