சனிக்கிழமை, மே 30
Shadow

ஓய்வூதியம் உயர்த்திய நடிகர் சங்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

விஷாலின் பாண்டவர் அணியின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நலிந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி திரட்டப்பட்டது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களான சிவகுமார், கார்த்தி, விஷால், உதயநிதி, ஜீவா, விக்ரம் பிரபு, சிரிஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம், சக்தி வாசு, சசிகுமார், பிரசன்னா, விஷ்ணு விஷால், சிபிராஜ், நடிகை சினேகா ஆகியோர் நிதியுதவி செய்தனர். தற்போது மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் குருதட்சணைத் திட்டத்தின் கீழ் நமது சங்கத்தின் 66 வயது முதல் 69 வயது வரை உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தர ஓய்வூதிய உதவித் தொகை ரூ.500 வழங்கப்பட்டுவந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழா மூலம் நமது சங்கக் கட்டடப் பணிக்கு நிதி வந்துள்ளது. அந்த நிதியிலிருந்து தங்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு தங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியத் தொகை ரூ. 500லிருந்து ரூ. 1500 ஆக உயர்த்தி 2018 பிப்ரவரி மாதம் முதல் தங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் 70 முதல் 79 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.2000 ஆகவும், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாராகி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சிவா மனசுல புஷ்பா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்ததில் மகிழ்ச்சியில் உள்ள உறுப்பினர்கள் தற்போது நடிகர் சங்கம் ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன