
சொகுசு கார்கள் வாங்குவதாக கூறி ஸ்டேட் வங்கியில் ரூ.3.45 கோடி வாகனக் கடன் பெற்று, அந்தப் பணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அருவா சண்ட’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இசக்கிராஜா, இ.மணிகண்டன், இ.ஈஸ்வரன், சரண்யா, செல்லமுத்து, ஷியாமிலி, சசிரேகா, வி.ஈஸ்வரன்,ஆர்.மணிகண்டன் ஆகிய 9 பேரும் உறவினர்கள். இவர்கள் வாகனக் கடன் ஆலோசகர் சித்ரா ஆலோசனையின் பேரில், சொகுசு கார்கள் வாங்குவதாகக் கூறி, ஸ்டேட் வங்கியின் சென்னை வேளச்சேரி கிளையில் ரூ.3.45 கோடி கடன் பெற்றனர்.
பின்னர் இந்த தொகையை வைத்து ‘ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், ‘அருவா சண்ட’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். கபடி வீரர் ராஜா மற்றும் மாளவிகா மேனன் இதில் நடித்துள் ளனர். ஆதி இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், கடனை திருப் பிச் செலுத்தாமல் இந்த படத்தை எந்த மொழியிலும் வெளியிடக் கூடாது என வங்கி கிளை தலைமை மேலாளர் பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். ‘அருவா சண்ட’ படத்தை வரும் 16-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக கடன் வாங்கிய 9 பேர், கடன் ஆலோசகர், படத் தயாரிப்பாளர் ராஜா ஆகிய 11 பேரும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

