உறுமீன் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அடுத்ததாக நாயை கதாபாத்திரமாகக் கொண்டு அட்வெஞ்சர் பாணியில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார்.
பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உறுமீன். சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல வரவேற்பையும் இயக்குநருக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி.
இந்தியாவில் நாய்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்கள் வந்தாலும், அவை முழுக்க நாய்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய அட்வெஞ்சர் படங்களாக இல்லை. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து முழுமையான அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அறிவித்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்காக 8 மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை சேகரித்திருக்கிறார். பலரும் இந்த முயற்சியை புறக்கணித்திருக்கின்றனர். இருப்பினும் நம்பிக்கையுடன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சக்திவேல் பெருமாள் சாமி. காக்டெயில் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
