S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். முளையூர் ஏ.சோணை இப்படத்தை இயக்கிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேறும் போது, ஒரு இளைஞர் அச்சு அசலாக “புரூஸ் லீ” போலவே மேடையேற அரங்கமே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தது.
முதலில் பேசியது இயக்குநர் முளையூர் ஏ.சோனை தான். மனிதர் 18 வருட காத்திருப்பில் கிடைத்த மேடை என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே பேசினார்.
அவர் பேசியதாவது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. மேலும் சான், ஏற்கெனவே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் பதக்கங்கள் பெற்றவர் என்று தெரிந்ததும் எனக்கும் இன்னும் அதிகமாக ஆசையும், பலமும் சேர்ந்து கொண்டது. இதன் பின்புதான் இந்தப் படத்தின் கதையையே உருவாக்கினேன்.
கதையின் நாயகனாக சான் இருந்தாலும், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லீதான். அவர் நடை, உடை, பாவனை.. அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதம்.. அனைத்தையும் நான் ரசிக்கும் அளவுக்கு சானிடம் இருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.
குறிப்பாக சண்டை காட்சிகளில் புரூஸ்லீ வெளிப்படுத்திய வீரத்தை இதில் கையாண்டிருக்கிறேன். என் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சண்டை பயிற்சியாளர் ‘த்ரில்’ சேகர் மிகச் சிறப்பாக சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக அவர்களது மனக்கண்ணில் புரூஸ்லீ தோன்றுவார் என்பது மட்டும் உண்மை” என்று பேசினார்.