
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். ஏ பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 7.30 மணிக்கும், பி பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 8.30 மணிக்கும் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

நாடு முழுவதும் இன்று நடக்கும் தேர்வை 13.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 170 மையங்களில் நடக்கும் தேர்வை 1.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இன்று காலையிலேயே மையத்தில் குவிந்துள்ளனர்.
324 Views
