வட மாநிலங்களில் இடி மின்னலுடன் கடந்த சில தினங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இந்த கனமழைக்கு 129 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் புயலில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பஞ்சகுலா நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதேபோல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
156 Views