18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
அதன்படி,18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்