
ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்ததோடு ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றதால் அவரை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சட்டமன்ற ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான தீர்மான நகலையும் கவர்னரிடம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி ஆட்சியமைக்க வரும்படி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மதியம் விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

