
மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!
லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படத்தை பகுதி பகுதியாக வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறி ஒரு ஆடியோவும் உலா வந்தது. அந்த செயலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய பிரச்சனையாக மதுரையில் செயல்படும் சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் என்ற கேபிள் சேனலில் எந்த அனுமதியும் பெறாமல் தர்பார் திரைப்படம் திருட்டுத்தனமாக கடந்த 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து லைக்கா நிறுவனத்திடம் மதுரை தர்பார் படத்தின் உரிமையை வாங்கியுள்ள CLN மூவிஸ் புகார் தெரிவிக்க அதன்பேரில் லைகா புரோடக்சன்ஸ் சார்பில் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
பிரபலமான ஒரு நடிகரின் படத்தை ஓட விடாமல் தடுத்து அதன் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
