
இறச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரி லாரியாக கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவத்தை கொஞ்ச நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசினார்கள்.
இதை மைய கருவாக எடுத்து “கல்தா” என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
கேரளா – தமிழக எல்லையில் உள்ள தன்னிலங்காடு கிராமமதான் இந்த கழிவுகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட கிராமம்.
மனித வாழ்வாதாரத்தை கெடுக்கும் நச்சு கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எப்படி துணை போகிறார்கள். கடைசியில் அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் அந்த கிராமத்தை என்ன செய்தது என்பதுதான் கல்தா கதை.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்த ஆண்டனி இந்த படத்திலும் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.
ஆண்டனியுடன் சிவ நிஷாந்த் என்பவரும் இன்னொரு கதா நாயகனாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக அய்ரா, திவ்யா ஆகியோர் 2 நாயகிகள். ஜெய் கிரிஷ் இசையமைத்த இப்படத்திற்கு வைரமுத்து, வித்யாசாகர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இன்றைய சூழலில் இதுபோன்ற சம்பவங்களை படமாக்க தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு தைரியம் வேண்டும்.
அப்புக்குட்டியை வில்லனாக பார்க்க முடியவில்லை. ஏனோ அந்த கதாப்பாத்திரம் அவருக்கு பொறுந்தவே இல்லை.
நல்ல கருத்தை சொல்ல வந்த படத்தின் திரைக்கதை பல இடங்களில் ஏனோ கல்தா கொடுத்து விட்டது. மேக்கிங்கும் இன்னும் யோசித்திருந்தால் பலம் சேர்த்திருக்கும்.
விளையாடி வெல்வதற்கு நல்ல களம் அமைந்தும் ஏனோ தேவை இல்லாத இடங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் மைய கரு கேரளா கழிவுகள் தமிழகத்தை பாழாக்குகிறது என்பதை நேரடியாக சொல்லியிருப்பது மட்டுமே படத்தின் மீதான ஒரே ஆறுதல்.
இந்த கதையிலும் திரைக்கதையிலும் இயக்குநர் ஹரி உத்ரா கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் “கல்தா” கவனம் பெற்று இருக்கும்.
– கோடங்கி
