கொரானா வைரஸ் தாக்கம் என்பது உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது.
சாமானிய மக்கள் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரை கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஏழை பணக்காரன் என்றில்லாமல் உலக மக்களை ரவுண்டு கட்டி அடிக்கும் கொரானா தாக்குதலில் சிக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
இங்கு இப்போது வரை 2,031 பேர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.
இதனையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.