
பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரம் நாடு முழுதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளனர். எனவே அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சூழலில் பஞ்சாப்பில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் இதுவரை 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரம், ஒடிசா அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல தமிழகத்திலும் ஊரடங்கு நீடிப்பு குறித்து நாளை மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
