தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது: “வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது குறித்து வரும் 8-ம் தேதிக்கு மேல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் நாளைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்.
புகைப்பிடித்தல், புகையிலை போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டாலும், அது போன்ற காட்சி வந்தாலும் அதன் தீமைகள் குறித்து குறிப்பிட்டு தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தீமை பற்றி குறிப்பிடமால் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை.
சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு உத்தரவு வழங்கியது. ஒரு தொடருக்கு ஒரு முறை அனுமதி வாங்கினால் போதும் என்ற அறிவிப்பையும் இரண்டாவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார். முதலில் வெளியிட்ட அறிவிப்பில் தினமும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று சின்னத்திரையினர் என்னிடம் தெரிவித்தனர். உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக ஒரு தொடருக்கு படப்பிடிப்பு நடத்த ஒரு முறை அனுமதி வாங்கினால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனை சின்னத்திரையினரும் ஏற்றுக்கொண்டு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்