
கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி!
அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.
கட்டுமான பணியை கண்காணிக்க ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் எளிமையாக நடைபெற்றது. கொரானா பீதி ஊரடங்கு இருந்தாலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கட்டுமான பணிகள் கொரானா ஊரடங்கு அமலில் இருந்தாலும் நேற்று தொடங்கியது.
அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது.
ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. விழாவும் மிக பிரமாண்டமான அளவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரானா வைரஸ் பரவி அனைத்து ஏற்பாடுகளையும் முடக்கிப் போட்டது. இருந்த போதும் திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.
