
“அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் கூல் கேப்டன் – தோனியை புகழ்ந்த ஸ்டாலின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு உலக கிரிக்கெட் குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இந்த நிலையில் டோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியுடன் டோனி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழி நடத்திய ‘கேப்டன் கூல்’ அவர்!

கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர். சட்டசபை கூட்டத்தொடர் நடந்தாலும் இடை இடையே ஸ்கோர் கேட்கும் அளவுக்கு கிரிக்கெட் விளையாட்டில் பிரியமாக இருந்தவர். அவரோடு தோனி எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டு வாழ்த்தினார் ஸ்டாலின்.
