வியாழக்கிழமை, மே 16
Shadow

தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாமல் நீடிக்கிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது.

ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவசிய காரணங்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும், அதில் முறைகேடுகள் உள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. எனவே இ-பாஸ் வழங்குவதில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ‘மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாத வகையில் இ-பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மறுநாளில் இருந்து இந்த உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தியது.

இந்த நிலையில் ‘இ-பாஸ்’ நடைமுறையில் தளர்வு செய்ததால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகிவிட்டதா? என்பது பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி முடிவெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

645 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன