
அதிமுக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது என்றும், நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே பயந்து ஓடும் நிலை உள்ளது என்றும், சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார் எனவும், சிதம்பரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சிதம்பரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடந்தது. திமுகவின் முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் முதன் முதலாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன். திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது விட்டு வாயிலின் முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டேன். எடப்பாடி அரசு எனக்கு மிகப்பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்தது. கலைஞரின் வீட்டு வாசலில் கைது செய்யப்பட்டேன் என்பதை அறிந்து கொள்ள கலைஞர் உயிரோடு இல்லை. இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அந்த பிரச்சாரக் கூட்டங்களில் உங்களுக்கு கூட்டம் கூடுகிறது எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என காவல்துறையினர் கூறினார்கள். அதன்படி உள்ளரங்க கூட்டங்களாக நிகழ்ச்சிகளை மாற்றிக்கொண்டேன்.
செல்லும் இடமெல்லாம் எழுச்சி. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் எனது பிரச்சாரத்திற்கும் எந்தவித இடையூறும் இல்லை. 15 இடங்களில் பேச திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இந்த கடலூர் மாவட்டத்தில் 25 இடங்களில் பேசி இருக்கிறேன். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினீர்கள். அதே போல இந்த தேர்தலிலும் அவர்களை ஓட ஓட விரட்டி 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது. முதல்வர் எடப்பாடியின் சம்பந்திதான் அனைத்து கான்டிராக்டுகளையும் எடுக்கிறார். சேலம் எட்டு வழி சாலையில் திட்டத்தில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே இந்த ஆட்சியைப் பார்த்து பயந்து ஓடும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி அவ்வளவு கேவலமான ஆட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். தமிழ் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள்.
நீட் திட்டம் கொண்டு வந்தனர். கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடந்த நிலை மாறி, தற்போது நீட் தேர்வு வந்து விட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் இறந்தவுடன் நீட்தேர்வு வந்து விட்டது. அரியலூர் அனிதா நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அது தற்கொலை அல்ல. அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து செய்த கொலை. இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் இறந்துள்ளனர்.இதுபோல்தான் ஸ்டெர்லைட் வழக்கு. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபற்றி முதலமைச்சர் எடப்பாடியிடம் கேட்டால் நான் டிவியை பார்க்கவில்லை என்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா? ஒருவர் டயர் நக்கி. மற்றொருவர் பிளைட் நக்கி. தவழ்ந்து தவழ்ந்து வந்து முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார். நீங்கள் தேர்தலில் அவர்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். தற்போது உள்ள அதிமுக, பாஜக, ஜெயலலிதா, சசிகலா என 3 பேருக்குமே உண்மையாக இல்லை. ஜெயலலிதா எப்படி இறந்தார்? அவருக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெ இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என எல்லோரும் கூறினார்கள். திடீரென ஒருநாள் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று கூறினார்கள்.
அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம்தான் பின்னர் வெளியே வந்து ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறினார்.
பதவி பிடுங்கப்பட்ட பிறகு ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தார். தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 8 முறை கூப்பிட்டும் ஓபிஎஸ் அந்த ஆணையத்திற்கு வரவில்லை. ஜெ இருந்தபோது அந்த மோடியா? இந்த லேடியா என ஜெயலலிதா குரல் எழுப்பினார். ஆனால் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மோடியிடமே எல்லாவற்றையும் அடகு வைத்து விட்டனர்.
இந்த கேடு கெட்ட ஆட்சியை அகற்ற வேண்டும். ஒவ்வொருவரும் 20க்கும் மேற்பட்டோரிடம் நேரில் சென்று இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பிஜேபியிடம் அடகு வைத்தாகி விட்டது. அதிமுகவினர் எடப்பாடி முதல்வர் என்கின்றனர். ஆனால் பாஜக தலைவர் முருகன், முதல்வர் யார் என பாஜக முடிவு செய்யும் என்கிறார். இதைவிட கேவலம் அதிமுகவினருக்கு வேறு எதுவும் இல்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்
