
சேலம் மாவட்டத்தில் தயாநிதிமாறன் வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக இன்று காலை ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
அதன்பின் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாகக் கூறி கருப்பு கொடி காட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் தயாநிதி மாறன் பயணித்த வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டது.
மேலும் பரபரப்பான சூழ்நிலையினால் இருதரப்பினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பிரச்சனையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தயாநிதி மாறன் ஓமலூரில் தங்க இருக்கும் ஹோட்டல் முன்பும் பாமகவினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்துகின்றனர்.
திமுக எம்.பி தயாநிதிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் பாமக பேரம் பேசி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 400 கோடி ரூபாய் பெற்றது“ என்று கூறியிருந்தார். தயாநிதிமாறனின் இந்த கருத்து பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
