
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் சூர்யாவின் அடுத்தப் படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடிக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது வரை ஓடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற தமிழ் படம் என இதனை சொல்லலாம். இதையடுத்து கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி படத்தில் நடித்த சூர்யா, தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ‘சூர்யா 40’ எனும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தில் நடித்திருந்தனர். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவும் ராஜ்கிரணும் இணைந்து நடித்தால், அது நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
