
மும்பையில் ரத்தின் டாடா கார் நம்பரைப் பெண் ஒருவர் தன் காரின் நம்பராக மாற்றிச் சுற்றி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. இவரைத் தெரியாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது. இவரது அலுவலகத்திற்கு இவர் கார் விதிமுறைகளை மீறிச் சென்றதாக போலீசார் தரப்பிலிருந்து இ-செல்லான் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த செல்லானில் விதிமுறை மீறல் செய்யப்பட்ட இடம் எனக் குறிப்பிட்ட இடத்திற்கு ரத்தன் டாடாவின் கார் செல்லவேயில்லை
இதில் ஏதோ சதித் திட்டம் இருப்பதை உணர்ந்த ரத்தன் டாடா குழுமத்தினர், இது குறித்து போலீசாரிடம் விசாரித்தனர். அவர்கள் சம்பவம் குறித்துப் பதிவான காட்சிகளைப் பார்த்த போது குற்றத்தில் ஈடுபட்டது ரத்தன் டாடாவின் காரே இல்லை என்பது தெரியவந்தது.
வேறு யாரோ தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது குறிப்பிட்ட அந்த கார் மும்பையில் 5கார்டன்ஸ் பகுதியில் நின்றது தெரியவந்தது போலீசார் அப்பகுதிக்குச் சென்று குறிப்பிட்ட அந்த காரை கைப்பற்றினர்.
பின்னர் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெண் ஒருவர் விட்டுச்செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த பெண் யார்? அவர் ஏன் ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்த வேண்டும் என விசாரணை நடந்து வருகிறது. ரத்தன் டாடாவின் கார் போல இன்னும் எத்தனை கார்கள் மும்பையில் போலியான எண்களுடன் சுற்றி வருகிறது எனவும் விசாரணை நடந்து வருகிறது.
